நக்கீரன் கோபால் கைது ஏன்.. இந்த கட்டுரைதான் காரணம்!
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது ஏன் என்பதற்கான விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது ஏன் என்பதற்கான விவரங்கள் வெளியாகி உள்ளது.
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். இவரது கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அவர் காலையில் வந்தார். அப்போது அவரை கிண்டி போலீஸார் கைது செய்தனர்.
புகார் அளித்தனர்
ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளை பாலியல் முறைகேடுகளில் ஈடுபட அழைத்ததாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
விசாரிக்கப்பட்டு வருகிறார்
இவர் தற்போது போலீசால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். கோபால் மீது என்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவில்லை.
என்ன கட்டுரை
நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையொன்றுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். ''4 முறை ஆளுநரை சந்தித்தேன் : நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்'' என்ற தலைப்பில் நக்கீரன் இதழில் வெளியான கட்டுரைதான் நக்கீரன் கோபால் மீதான நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பு
பத்திரிக்கை ஆசிரியர் ஒருவரை ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். தேசிய அளவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.