திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு காரணம் என்ன ? கருணாநிதி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணம் என்பது பற்றி திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளை தவிர்த்து நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 98 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 89 இடங்களை கைப்பற்றியது. அண்மையில் திருப்பரங்குன்றம் அதிமுக எல்எல்ஏ சீனிவேல் மரணம் அடைந்தார். இதனால் அதிமுக எம்எல்ஏ பலம் 133 ஆக குறைந்தது.

 reason for losing the assembly election success, says karunanidhi

இந்நிலையில் இந்த தேர்தலில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணம் என்பது பற்றி அக்கட்சியின் தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப் பட்சமாகவே இருந்ததையும், ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதைப் போலச் செயல்பட்டதையும் தமிழகமே நேரிலே கண்டது.

தேர்தல் ஆணையத்திடம், திமுக சார்பில் எத்தனை முறை தான் புகார் மனுக்களைத் தருவது? பணப்பட்டுவாடா பற்றி நாளேடுகளில் செய்திகள் வராத நாள் உண்டா? அமைச்சர்களைப் பற்றி எத்தனையோ புகார்கள்! பொது மக்கள் திரண்டு நின்று, சில அமைச்சர்களைத் தொகுதிக்குள்ளேயே வரவிடாமல் தடுத்து விரட்டியடித்தார்கள் என்று எத்தனை செய்திகள் வெளிவந்தன? அதையெல்லாம் மீறி அந்த அமைச்சர்கள் அந்தத் தொகுதிகளில் பின்னர் எப்படி வெற்றி பெற்றார்கள்?

மூன்று அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட கரூர் அன்புநாதன் பிரச்சினை என்ன? துபாயில் ஓட்டல் என்றும், வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் என்றும், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகள் என்று பேசப்பட்ட பெரிய ஊழல் எவ்வாறு மூடி மறைக்கப்பட்டது? 570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்டதையே வங்கியின் பணம் என்று டெல்லியிலிருந்தே கூறி விட்டார்களே?
சிறுதாவூரில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்களாவில் இருந்த கன்டெய்னர்கள் புகைப்படமாக எடுத்து பார்ப்போர் அதிர்ச்சி அடையும் அளவுக்கு வெளியிடப்படவில்லையா? நாட்டின் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறைச் சட்டங்களுக்கெதிரான இந்த நிகழ்வுகள் என்ன ஆயிற்று?

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையமே தமிழகத்தில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்தார்களே; சட்டத்திற்குப் புறம்பான இந்தச் சம்பவங்களில் சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? ஒரு சில ஊடகங்களும், நாளேடுகளும் நடுநிலை தவறி, ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக மாறி, தி.மு.க. வின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை ஏவி விட்டு, பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்றுவதைப் போலப் பகல் வேடம் போட்டார்களே!

இவ்வளவையும் மீறி, அனைத்து வகை ஆயுதப் பிரயோகங்களையும் எதிர்த்துப் போராடி தி.மு.கழகம் தற்போது பெற்ற வாக்குகளை விட அதிகமாகப் பெறுவதற்கான வழிவகைகள் உள்ளனவா? இருந்தால் சொல்லுங்கள், ஏற்றுக் கொள்கிறேன்!

வாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமான தவறுகள் இருக்கின்றன என்று எத்தனை முறை புகார் மனுக்கள் தரப்பட்டன? கடைசியாக தேர்தலுக்கு முன்பு தரப்பட்ட வாக்காளர் பட்டியலை இப்போது வேண்டுமானாலும், எடுத்துப் பாருங்கள். என்னுடைய திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, தேர்தல் ஆணையரிடமே அதன் நகல்கள் தரப்பட்டன.

மற்ற தொகுதிகளை எடுத்துக் கொண்டால், ஆவடியில் 19,723 - கொளத்துhரில் 5,588 - திருப்போரூரில் 13,404 - பாலக்கோட்டில் 20,199 - வானூரில் 10,768 - விக்ரவாண்டியில் 11,592 - கள்ளக் குறிச்சியில் 21,247 - அவினாசியில் 23,270 - திருப்பூர் (வடக்கு) - 24,286 - திருப்பூர் தெற்கு 12,024 - பல்லடத்தில் 28,805 - உடுமலைப்பேட்டையில் 14,243 - குன்னம் 21,231 - சோளிங்கர் 22,227 - பெரம்பலுர் 25,105 - காங்கேயம் 23,956 - கலசப்பாக்கம் 20,098 என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு போலி வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்தார்கள்.

இதையெல்லாம் மீறித் தான் தி.மு. கழக அணி 100 வாக்குகளுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் இரண்டு தொகுதிகளிலும், 1000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 8 இடங்களிலும், 5000 வாக்குகள் வித்தியாசத்தில் 21 இடங்களிலும், 10000 வாக்குகள் வித்தியாசத்தில் 22 இடங்களிலும் என்று 53 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. திமுகவும், அ.தி.மு.க. வும் இந்தத் தேர்தலில் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில் திமுக 89 இடங்களிலும், அ.தி.மு.க. 83 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இன்னும் சொல்லப் போனால், நாளிதழிலே, ஆளும் அதிமுக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றுள்ள போதிலும், தொகுதி வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில், அதிமுக வேட்பாளர்களில் இரண்டு பேர், மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் தொகையைப் பறி கொடுத்துள்ளனர் என்றும், இதற்கு நேர் மாறாக தி.மு. கழகத்தால் நிறுத்தப்பட்டுள்ள 176 வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையைத் திரும்ப பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த காரணங்களால், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது. ஆளுங்கட்சியின் இராட்சசப் பணநாயகமும், தேர்தல் ஆணையத்தின் நயவஞ்சகச் செயல்பாடுகளுமே தி.மு.க. வின் வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறிக்க முக்கியமான காரணம்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+