சென்னையில் மாஸ் காட்ட குவியும் அதிருப்தி தேமுதிகவினர்!
சென்னை: தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்டு விட்ட நிலையில் சென்னையில் போட்டிப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ள வி.சி.சந்திரகுமார் கோஷ்டி, பெரும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டி தேமுதிகவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த மும்முரமாக உள்ளது.
தேமுதிகவில் கொறடாவாக இருந்த வி.சி.சந்திரகுமார் தலைமையில் 10 பேர் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இவர்களில் சந்திரகுமார் உள்பட 3 பேர் எம்.எல்.ஏக்கள்.
இவர்கள் கட்சித் தலைமைக்கு கெடு விதித்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 10 பேரையும் விஜயகாந்த் அதிரடியாக டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில், தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டம் மற்றம் செயற்குழுக் கூட்டம் 10ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. விஜயகாந்த் தலைமையில் இது நடைபெறுகிறது.
ஆனால், வி.சி.சந்திரகுமார் கோஷ்டி அதே நாளில், போட்டி பொதுக்குழுக் கூட்டம் ஒன்றை சென்னையில் கூட்டியுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்டி வந்து மாஸ் காட்டவும் சந்திரகுமார் கோஷ்டி மும்முரமாக உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு சேலத்திலிருந்து 2000 பேர் வரவுள்ளதாக எம்.எல்.ஏ. எஸ்.ஆர். பார்த்திபனின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பொதுக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யவிருப்பதாக சந்திரகுமார் கோஷ்டியினர் கூறி வருகிறார்கள்.