தமாகாவிலிருந்து தாவும் பீட்டர் அல்போன்ஸ்.. ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை
சென்னை: தமாகாவிலிருந்து விலகி காங்கிரஸில் மீண்டும் சேரவுள்ளதாக கூறப்படும் பீட்டர் அல்போன்ஸ், இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தேமுதிகவைத் தொடர்ந்து தற்போது தமாகாவும் இரண்டாக உடைகிறது. யாருடன் கூட்டணி என்பதில் ஜி.கே.வாசன் தெளிவான, உறுதியான, சரியான முடிவை விரைவாக எடுக்கத் தவறியதால் மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குறிப்பாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியுடன் வாசன் இணைந்ததை அவர்கள் ரசிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேசமயம், பீட்டர் அல்போன்ஸ் மீண்டும் காங்கிரஸுக்கே திரும்புவதாக தெரிகிறது. அவருடன் காஞ்சிபுரம் விஸ்வநாதனும் இணையவுள்ளார். இதனால் காங்கிரஸ் தரப்பு உற்சாகமடைந்துள்ளது.
இந்த நிலையில் பீட்டர் அல்போன்ஸ் சென்னையில் தனது அண்ணா நகர் வீட்டில் வைத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைவார் என்று தெரிகிறது.
பீட்டர் அல்போன்ஸ் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்தால் அவர் தென்காசி தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
தமாகா சிறுபான்மையினர் பிரிவு தலைவர் அதிருப்தி
இதற்கிடையே, தமாகா சிறுபான்மையினர் பிரிவு தலைவர் அமீர்கானும் வாசன் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். நிர்ப்பந்தத்தின் பேரிலேயே வாசன் கூட்டணி அமைத்துள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரசில் முனிரத்னம்
இதற்கிடையே, வேலூர் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் முனிரத்தினம் தலைமையில் ஏராளமானோர் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவன் வந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இணந்தனர்.












Click it and Unblock the Notifications