“பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தம்”.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பேச்சால் அதிர்ந்து போன நிர்வாகிகள்!
திருப்பூர்: "பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் கட்சியைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம்" என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக - அதிமுக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தி அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமித் ஷா, கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார்
பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற தேர்தலை என்.டி.ஏ கூட்டணியின் இதர கட்சிகளுடன் இணைந்து சந்திக்க இருக்கிறோம் என்பதை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று கூறியிருந்தார் அமித் ஷா. இதனைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
இது அதிமுகவினர் இடையேயும் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பேசுகையில், "பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதற்கு முன் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அதிமுகவுக்கு வேலை பார்க்க முடியாது என இஸ்லாமிய சகோதரர்கள் கூறினார்கள்.
இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம். அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும். கூட்டணி வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள். தாமரைக்கு ஓட்டு போட கூட உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம்" எனப் பேசினார். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன், அவரது இந்தப் பேச்சை தவிர்க்குமாறு சைகை செய்தார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன் பேசும்போது கண் கலங்கி குரல் உடைந்து உருக்கமாகப் பேசினார். "பாஜக உடன் கூட்டணி வைத்தது எங்களுக்கு வருத்தம். நிர்ப்பந்தத்தால் கட்சியை உடைக்கப் பார்க்கின்றனர். இஸ்லாமியர்களுடன் அதிமுக துணை நிற்கும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications