முதல்வர் பதவிக்கு ஆசையில்லை… வாளேந்தி சொன்ன வைகோ
தேனி: தமிழகத்தில் முதல்வர் பதவி போட்டியில் பலர் இருக்கின்றனர். தனக்கு அந்த ஆசையில்லை. தான் பதவியை விரும்பவும் இல்லை என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநில மக்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்க போராடியதற்காக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அந்த கட்சியின் சார்பில் மதுரையில் பாராட்டு விழா நடைபெற்றது.

தங்கவாள் பரிசு
இந்த விழாவில், வைகோவுக்கு ஒன்றரை அடியில் பென்னிகுயிக்கின் ஐம்பொன் சிலையும், 101 சவரன் தங்கத்தினால் ஆன வீரவாளும் பரிசளிக்கப்பட்டது.

நியூட்ரினோ திட்டம்
இந்த கூட்டத்தில் பேசிய வைகோ, மத்திய அரசு அமைக்கவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்காக மேற்குத் தொடர்ச்சி மலையில், 8 லட்சம் டன் அளவிலான பாறைகள் தகர்க்கப்படவுள்ளதாகவும், இதற்காக ஒரு லட்சம் டன் அளவில் ஜெலட்டின் வெடி பொருள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அழியும் அபாயம்
இதனால், தமிழகத்தில் தேனி மாவட்டமும், கேரளாவில் இடுக்கி மாவட்டமும் முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைபெரியாறு அணை
முல்லை பெரியாறு அணைக்கு ஈடாக தொழில்நுட்ப ரீதியாக உலகில் எந்த அணையும் கட்டப்படவில்லை. அணையின் நீர் மட்டத்தை உயர்த்தினால் அணை உடையும்; மக்கள் அழிவர் என அணை பகுதியில் ஆக்கிரமித்துள்ளவர்கள் பொய் பிரசாரம் செய்து கேரள மக்களை நம்ப வைத்தனர்.

அரசு என்ன செய்கிறது
தற்போது அணைக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர். பதிவேட்டில் கையெழுத்திட்டுச் செல்லுமாறு வனத்துறையினர் நிர்பந்திக்கின்றனர். இப்பிரச்னையில் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?

நம்மை சுற்றிலும் ஆபத்து
தமிழக மக்களை பொருளாதார ரீதியாக ஒழிக்க திட்டமிட்டுள்ளனர். நம்மைச் சுற்றிலும் ஆபத்து சூழ்ந்துள்ளது. சோலார் மின்சார திட்டத்திற்கு விவசாய நிலத்தை விற்காதீர்கள்.

மீத்தேன் திட்டம்
தஞ்சாவூர் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை ஏற்கனவே மத்தியில் ஆட்சிபுரிந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதித்தது. இதற்கு முந்தைய தி.மு.க.ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். இத்திட்டத்தால் தமிழகம் அழிந்துவிடும் என்ற கவலை உள்ளது.

வைகோ எதிரியா?
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக இத்தாலியில் போராடுகின்றனர். மீத்தேன் திட்டத்திற்கு நியூயார்க் கவர்னர் தடை விதித்துள்ளார்.வளர்ச்சித் திட்டங்களுக்கு வைகோ எதிரி என்கின்றனர்.

முதல்வர் பதவி
என்னை விற்க நான் தயாரில்லை. தமிழகத்தில் முதல்வர் பதவி போட்டியில் பலர் உள்ளனர். பதவியை நான் விரும்பவில்லை.

மதுக்கடைகளை மூடுவோம்
2015டிசம்பருக்குள் மதுக்கடைகளை மூடுவது பற்றி தமிழக அரசு முடிவெடுக்காவிடில், அவற்றை இயங்கவிடாமல் செய்வோம். மதுவை மறந்தால்தான் இளைஞர்கள் போராட முடியும்.

மன்னிப்பு இல்லை
இலங்கை அதிபராக வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, அங்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அனுமதித்து உண்மை நிலையை அறியச் செய்ய வேண்டும். ராஜபக் ஷேவிற்கு மன்னிப்பே இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications