"பெற்ற தாயை கொல்லவா உன்னை ஜாமீனில் எடுத்தோம்.." தஷ்வந்த்தை அடிக்க பாய்ந்த உறவினர்கள்
Recommended Video
சென்னை: கொடூர கொலையாளி தஷ்வந்த்தை அவரது உறவினர்களே தாக்க முயன்றுள்ளனர்.
6 வயது சிறுமி ஹாசினி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தொடர்புள்ள கொடூரன், தஷ்வந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவரது தாய் மற்றும் உறவினர்கள், தங்களிடமிருந்த பணத்தை புரட்டி எடுத்து, ஜாமீனுக்கு அணுகி, ஜாமீன் தொகையை கட்டி விடுவித்து கொண்டுவந்தனர்.
மேலும் சட்டப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, தஷ்வந்த் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டது. இதற்கும் தாய் உள்ளிட்ட உறவிர்தான் காரணம்.
தாயை கொன்ற மகன்
அதேநேரம், சிறுமி ஹாசினிக்காக குரல் கொடுத்தோருக்கு தஷ்வந்த் சுதந்திரமாக நடமாடியது வேதனையை கொடுத்தது. சிறுமி கொலைக்கு பிறகு முகலிவாக்கம் பகுதியிலிருந்து குன்றத்தூருக்கு இடம் மாறினர் தஷ்வந்த் மற்றும் குடும்பத்தினர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு தஷ்வந்த், தன் தாய் சரளாவை சுத்தியலால் அடித்துக் கொலை செய்து நகைகளையும், கொள்ளையடித்து பெங்களூர் வழியாக மும்பை தப்பினார்.
தப்பிய தஷ்வந்த்
மும்பையில் தஷ்வந்த்தை பிடித்த தமிழக தனிப்படை போலீசார் சென்னைக்கு விமானத்தில் அழைத்துவர முயன்றபோது ஏர்போர்ட் அருகே போலீஸ் பிடியிலிருந்து தஷ்வந்த் தப்பி ஓடினார். இருப்பினும் விடாத போலீசார், தஷ்வந்த்தை அந்தேரி பகுதியில் கைது செய்து நேற்று சென்னை, புழல் சிறையில் அடைத்தனர்.
அடிக்க பாய்ந்தனர்
சென்னைக்கு தஷ்வந்த் அழைத்து வந்தவுடன் அவரது உறவினர்கள் சிலர் காவல் நிலையம் சென்று தஷ்வந்த்தை சந்தித்துள்ளனர். கோபத்தில் திட்டியுள்ளனர். சிலர், போலீசார் முன்னிலையில், தஷ்வந்த்தை அடிக்க பாய்ந்துள்ளனர். அதை போலீசார் தக்க நேரத்தில் தடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காகவா ஜாமீனில் எடுத்தோம்?
"உன்னை போராடி ஜாமீனில் வெளியே எடுத்ததோமே, பெற்றத் தாயையே கொலை செய்துவிட்டாயே" என்று அந்த உறவினர்கள் ஆத்திரத்தில் பேசியுள்ளனர். ஆத்திரத்தின் உச்சியில் இருந்த உறவினர்களிடமிருந்து தஷ்வந்த்தை மீட்டு கொண்டு சென்று புழல் சிறையில் அடைப்பதற்குள் போலீசாருக்கு, போதும், போதும் என்று ஆகிவிட்டதாம். போலீசாரின் விசாரணையில், தன்னுடைய அப்பாவை கொலை செய்ய தஷ்வந்த் திட்டமிட்டிருந்த தகவலும் கிடைத்ததாக கூறப்படுகிறது.