திருச்சி அருகே இந்து முன்னணி நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மதமாற்ற முயன்ற இருவர் கைது
திருச்சி: திருச்சி அருகே, இந்து முன்னணி கூட்டம் நடைபெற்ற பகுதியில் மற்றொரு மதத்தை சேர்ந்தவர்கள் மத பிரச்சார துண்டு பிரசுரங்களை கொடுத்ததால் அவர்கள் போலீசாரிடம் பிடித்துகொடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி அருகேயுள்ள சோமரசம்பேட்டை அடுத்த சீராத்தோப்பில் உள்ளது பாரதிய பண்பாட்டு பயிற்சி கல்லூரி. இந்த கல்லூரியில் இந்து முன்னணியின் மாநில அளவிலான கூட்டம் நடந்தது. அப்போது, கல்லூரிக்கு வெளியே நின்றபடி, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், பள்ளி ஆண்டு விழா அழைப்பிதல் என்று கூறி, ஒரு சிலர், துண்டு பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
அதில் ஒரு புறம் பள்ளி விழா பற்றியும், மற்றொரு புறம் ஒரு மதத்தை பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கண்ட அந்தநல்லூர் ஒன்றிய இந்து முன்னணி அமைப்பாளர் குணசேகரன் அவர்கள் மத பிரசாரம் செய்ததாக சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, திருச்சியை சேர்ந்த ராஜராஜன் (32), சிம்மராஜ் (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.