சேலத்தில் விறுவிறு மறுவாக்குப்பதிவு : 90.16 சதவீத வாக்குகள் பதிவு
சேலம்: சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 254ல் இன்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 90.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த மாதம் 24ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் சேலம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 254ல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி அந்த வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. ஏற்கனவே கடந்த 24ம் தேதி இடது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டதால், இன்றைய வாக்குப்பதிவில் வாக்காளர்களின் இடதுகை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது. மேலும், கடந்த 24ம் தேதி வாக்களிக்காதவர்களும் இன்று வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 254வது வாக்குச்சாவடியில் 772 வாக்காளர்கள் உள்ளனர். அதில் கடந்த மாதம் 24ம் தேதி 683 பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த மறு வாக்குப்பதிவில் 90.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் பதிவான வாக்குகளில் ஆண்கள் 355, பெண்கள்341 என மொத்தம் 696 பேர் வாக்களித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications