ஜெ. பிரசார கூட்டத்தில் பலியானவர் வீட்டில் செய்தி சேகரித்த நிருபர் மீது தாக்குதல்
சேலம்: சேலத்தில் நேற்று ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற திமுக ஆதரவு செய்தித்தாள் நிருபர் அதிமுகவினரால் தாக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாட்டம், மகுடஞ்சாவடியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஜெயலலிதா கலந்து கொண்டு உரையாற்றினார்.

கூட்டத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள், காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கடுமையான வெயிலில் சிக்கி தவித்தனர். இதில் 10க்கும் அதிகமானோர் மயக்கமடைந்தனர். மேலும், மகுடஞ்சாவடியைச் சேர்ந்த பச்சியண்ணன், ஆத்தூர் அருகிலுள்ள கடம்பூரை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் பெரியசாமி (55) ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பெரியசாமி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரிப்பதற்காக இன்று காலை நக்கீரன் முதன்மை நிருபர் சிவசுப்பிரமணியனும், ஆத்துர் திமுக ஆதரவு பத்திரிகையின் நிருபர் சேகரும் ராமநாதபுரம் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கே பெரியசாமியின் வீட்டிற்கு சென்று அவரது மகன் மற்றும் அவரது உறவினர்களிடம் விவரம் கேட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும் மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன், சேலம் மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் ஏ.டி.அர்ஜுனன் ஆகியோர் தலைமையில் 3 கார்களில் அதிமுகவினர் அங்கு வந்துள்ளனர்.
காரை விட்டு இறங்கியதும் சேகரை பார்த்த இளங்கோவன் இவனால்தான் நமக்கு நிறைய தொல்லை வருகிறது என்றும், கேமராவை பிடிக்கி இந்த நாயை அடித்து துரத்துங்க என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவருடன் வந்த ஒருவர் சேகரின் நெஞ்சின் மீது குத்தி கீழே தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த டிஜிட்டல் கேமராவை பிடிங்கி தரையில் அடித்து உடைத்துவிட்டு, நல்லது நடக்கிறதை எதுக்குடா கெடுக்குறீங்க என்று கூறிவிட்டு சென்றாராம்.
இதையடுத்து இரு நிருபர்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். காயமடைந்த சேகர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.












Click it and Unblock the Notifications