துவரம்பருப்பு கிலோ ரூ. 110... கூட்டுறவு, அமுதம் அங்காடிகளில் ரிசர்வேஷன் தொடங்கியது..!
சென்னை: தமிழக அரசு சார்பில் குறைந்த விலையில் கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடியில் துவரம் பருப்பை வாங்குவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உணவகங்களிலும் பருப்பு உணவுகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துவரம் பருப்பு விலையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறைந்த விலையில்...
இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், 20 அமுதம் அங்காடிகள், 71 கூட்டுறவு அங்காடிகளில் துவரம் பருப்பு கிலோ ரூ. 110க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு...
இதற்கென மத்திய அரசு தமிழகத்திற்கு 500 டன் துவரம் பருப்பை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பருப்புகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அரைகிலோ 55 ரூபாய்க்கும், ஒரு கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

தீபாவளி நேரம்...
சந்தை விலையை விட இது மிகவும் குறைவு என்பதால் இவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பருப்பின் தேவையும் அதிகமாக உள்ளது.

நெரிசலைத் தவிர்க்க...
எனவே, குறைந்த விலையில் பருப்பு விற்பனை தொடங்கும் போது, மக்கள் நெரிசலைத் தவிர்க்க முன்பதிவு மூலம் துவரம் பருப்பை விற்பனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்களாம்.

முன்பதிவு...
இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாம். இதற்காக பருப்பு வாங்க விரும்புவோரின் முகவரி, தொலைபேசி எண் முதலியவற்றை அதிகாரிகள் குறித்துக் கொள்கின்றனர். இதன்படி, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு கிலோ துவரம் பருப்பு மட்டும் தான் வழங்கப்படுமாம்.

எதிர்பார்ப்பு...
தினமும் ஒரு கடைக்கு 500 முதல் 1000 கிலோ பருப்பு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளதாம். தற்போது இந்த அரசு அங்காடிகளில் தினமும், 75 - 100 கிலோ துவரம் பருப்பு விற்பனையாகிறது. குறைந்த விலையில் விற்பனை தொடங்கும் போது இந்த எண்ணிக்கைப் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.












Click it and Unblock the Notifications