ஊருக்குள் மதுக்கடையா… தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஊருக்குள் டாஸ்மாக் திறக்கப்படுவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதிகாரிகள் கடைகளை திறக்க மாட்டோம் என்று உறுதி அளித்த பின்னரே முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
தூத்துக்குடி: ஊருக்குள் மதுக்கடைகள் திறக்க முயற்சிப்பதை அறிந்த பொதுமக்கள் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி தாலுக்கா இலுப்பையூரணி பகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி நகர், வடக்கு இலுப்பயூரணி, தாமன்நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிந்தாமணி நகரில் ஊருக்குள் டாஸ்மாக் கடைகள் அமைக்க ஏற்பாடு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் ஊருக்குள் மதுக்கடைகள் திறந்தால் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி மனு அளித்தனர். ஆனால் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த சிந்தாமணி நகர் மற்றும் சுற்றுப் புறத்தை சேர்ந்தவர்கள் மாலை கோவில்பட்டி தாலுக்கா அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.
அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வருவாய் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனுவையும் அளித்தனர். அந்த மனுவை பெற்று கொண்ட வருவாய் துறையினர் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் முற்றுகை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.