சீட்டுக் கிடைக்குமா சிட்டிங் எம்பிகளுக்கு? 36 தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக 36 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய 18 எம்.பிக்களில் யார் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற பட்டிமன்றம்தான் திமுகவில் ஹாட் டாபிக்.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை தலா ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகளுக்கு வருத்தம் என்பது வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
36-ல் திமுக போட்டி?
எஞ்சிய 36 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது. ஒருவேளை இடதுசாரிகள் வந்தால் இந்த எண்ணிக்கை சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.
கடந்த முறை 22
இருப்பினும் கடந்த தேர்தலை விட இம்முறை தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க. 22 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.
ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல்
போட்டியிட்ட 22 தொகுதியில் 18 இடங்களை கைப்பற்றியது. தற்போது கூடுதல் இடங்களில் போட்டியிட இருக்கிறது திமுக. இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.
சிட்டிங் எம்.பிகளுக்கு சீட்?
தற்போதைய சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்குமா? இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்களா? என்பதுதான் இப்போது திமுக தலைமையகமான அறிவாலயத்தின் பட்டிமன்றம்.