ரிப்பன் மாளிகைக்கு 100 வயசாச்சு… பராமரிப்பு பணிகள் தாமதம்!
சென்னை: சென்னையின் வெள்ளை மாளிகையான ரிப்பன் மாளிகை கட்டடம் நவம்பர் 26ம் தேதியான இன்று தனது 100 வது பிறந்தநாளினை கொண்டாடுகிறது. ஆனால் பாரம்பரியம் மிக்க மாளிகையினை வாழ்த்தவும், நூற்றாண்டு விழாவை கொண்டாடவும்தான் ஆட்கள் இல்லை. 100 வது ஆண்டை அறிவிக்கும் வகையில் மின் விளக்குகள் கூட அமைக்கப்படவில்லை.
ரிப்பன் மாளிகையில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், இப்போது 60 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடத்த புதன்கிழமை திட்டமிடப்பட்ட நிலையில், சீரமைப்புப்பணிகள் முடியாததால் விழாக்கோலம் பூண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடத்தின் பெருமையை பறைசாற்றுவதற்கு கூட மாநகராட்சி மேயரான சைதை துரைசாமியும், மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரும் சென்னையில் இல்லை என்பது வேதனையான விசயம்.
பாரம்பரிய கட்டடம்
ரிப்பன் கட்டடத்துக்கு 1909-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அப்போதைய வைசிராய் மின்டோ அடிக்கல் நாட்டினார். சுமார் 3 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள், 1913-ல் நிறைவடைந்தன. இந்த கட்டடத்தைக் கட்ட அப்போது ரூ. 7.5 லட்சம் செலவானது. 1913-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதியன்று அப்போதைய வைசிராய் ஹார்டின்ஜ் திறந்து வைத்தார். அன்றிலிலுந்து சென்னை மாநகராட்சி இந்த கட்டடத்திலேயே செயல்பட்டு வருகிறது.
வெள்ளை மாளிகை
ரிப்பன் கட்டடம் இந்திய - சாரசனிக் கட்டடக் கலை முறையில் வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயப் பொறியாளர் ஜி.எஸ்.டி. ஹாரிஸ் இதை வடிவமைத்தார். இதனை லோகநாத முதலியார் கட்டி முடித்தார். வெள்ளை நிறத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையில், பல இடங்களில் நுட்பமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ள இதன் நீளம் 252 அடிகள். அகலம் 126 அடிகள். இதில் உள்ள கோபுரத்தின் உயரம் 132 அடிகள் ஆகும். இந்த கோபுரத்தில் 8 அடி விட்டமுள்ள கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.
ரிப்பன் பிரபு
உள்ளாட்சி முறையின் தந்தை என கருதப்படும் ரிப்பன் பிரபுவின் நினைவாக இந்த கட்டடத்துக்கு ரிப்பன் கட்டடம் என பெயரிடப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் 1880-ஆம் ஆண்டு முதல் 1884-ஆம் ஆண்டு வரை கவர்னர் ஜெனரலாக அவர் பதவி வகித்துள்ளார். ரிப்பன் பிரபுவின் சிலையும் கட்டட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
325 ஆண்டு வரலாறு
325 ஆண்டுகள் வரலாற்றை உடையது சென்னை மாநகராட்சி. இதில் 100 ஆண்டுகளாக மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளை பார்த்துக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது சென்னையின் வெள்ளை மாளிகையான ரிப்பன் கட்டடம்.
கடிகாரம் ஒலிக்கும்
ரிப்பன் கட்டடத்தில் உள்ள மணிக்கூண்டு கடிகாரம் கால் மணி நேரத்துக்கு 4 முறை ஒலித்து, ஒரு மணி நேரத்தில் 16 முறை ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த கடிகாரத்தின் மறு சீரமைப்பு பணிகளை நடந்து வருகின்றன. டயல் வேலைகள் ஒரு சில நாள்களில் முடிவடைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீரமைப்பு பணிகள்
மாளிகையின் வெளிப்புறத்தில், பின்பக்கத்தை தவிர மற்ற பகுதிகளில் பணிகள் முடிந்துள்ளன. கோபுரம் சீரமைப்பு பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளன. கடிகாரம் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. மாளிகைக்கு பூச வேண்டிய வெள்ளை நிறத்தை, தொழில்நுட்பக் குழு தேர்வு செய்துள்ளது. இனிதான் இதற்கான பணிகள் தொடங்கப்படும்
பழைய பொலிவு பெற
மணலுடன், கடுக்காய், தண்ணீர், வெல்லம் கலந்த கலவை பூசப்படுகிறது. இந்த பணிகள் வடக்குப் பக்க சுவரில் பாக்கியுள்ளன. அதேபோல ரிப்பன் மாளிகையின் உள் அலங்கார பணிகள் பாக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். . பழைய பொலிவுடன் வெள்ளை மாளிகையாக, ரிப்பன் மாளிகை மாறுவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். அதன் பிறகே நூற்றாண்டு விழா பற்றி முடிவு செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications