ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளை 11 மணிக்குள் ரிசல்ட் – சந்தீப் சக்சேனா
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுகள் நாளை காலை 11 மணிக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகியது. 230 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ராணிமேரி கல்லூரியில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அந்த அறைக்கு வெளியே துணை ராணுவ படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
5 அடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணிமேரி கல்லூரியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய துணை ராணுவ படையினர் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற இரண்டு அடுக்குகளில் ஆயுதப்படை போலீசாரும், மற்ற இரண்டு அடுக்குகளில் சென்னை மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
17 சுற்றுகள் எண்ணிக்கை
வாக்கு எண்ணும் மையத்தில் செவ்வாய்கிழமை வாக்குகள் எண்ணுவதற்கு வசதியாக 14 மேஜைகள் போடப்பட உள்ளன. பதிவான வாக்குகள் மொத்தம் 17 சுற்றுகளாக எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் வாக்கு எண்ணும் அலுவலர்களுடன் ஒரு நுண் பார்வையாளர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் என கூடுதலாக 3 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.

11மணிக்கு முடிவுகள்
காலை 9 மணிக்கு முன்னணி நிலவரமும், 11 மணிக்கு இறுதி நிலவரமும் தெரியவரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
முகவர்களுக்கு மட்டும் அனுமதி
வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அங்கீகார அடையாள அட்டை உள்ளவர்களும், வேட்பாளர்களின் முகவர்களும் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். காலை 7.30 மணிக்குள் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications