ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு விசிக ஆதரவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்னும் 2 தினங்களில் நடைபெற உள்ளது.

திமுக முதலாவதாக வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிப்பின் போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருதுகணேஷ் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக வசந்திதேவி போட்டியிட்டார். தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நலக்கூட்டணி சிதறியது. ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்தனர்.
திமுக பக்கம் தற்போது அதிகம் நெருக்கம் காட்டி வரும் திருமாவளவன், இப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசினார், ஆதரவு கேட்டு எழுத்துப்பூர்வமாகவும் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதசார்பற்ற கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் நலக்கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் திருமாவளவன். தற்போது மீண்டும் திமுக உடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications