ஆர்கே நகர் தேர்தல்: வாழ்வா சாவா போராட்டத்தில் கட்சிகள்- அரங்கேற போகும் வரலாறு காணாத முறைகேடுகள்!
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரலாறு காணாத முறைகேடுகள் அரங்கேறும் அபாயம் உள்ளது.
Recommended Video

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை டிசம்பர் 31-க்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தேர்தலானது களம் காணுகிற கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்பதால் வரலாறு காணாத அத்தனை முறைகேடுகளும் அரங்கேறுகிற பேராபத்தும் இருக்கிறது.
ஜெயலலிதா மறைந்து ஓராண்டாகிவிட்டது. இன்னமும் அவரது ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போது அங்கிங்கெனாதபடி திசையெங்கும் முறைகேடுகள், பணப்பட்டுவாடாதான்... இதன் உச்சமாகத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்ட தேர்தலே நிறுத்தப்பட்டது.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி
இப்போது களமும் காட்சிகளும் மாறிவிட்டன. அதிமுகவின் அதிகாரப்பூர்வ இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு கிடைக்கலாம்; இந்த தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்கிற நிலைமை இருக்கிறது. அப்படி இரட்டை இலை கிடைத்தால் ஜெயலலிதா ஜெயித்த தொகுதியில் வென்றே தீர வேண்டிய நெருக்கடி ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு இருக்கிறது.

அக்னி பரீட்சை
ஆகையால் அத்தனை அமைச்சர்கள், அரசு நிர்வாகம் முழுவதுமாக தேர்தல் களத்தில் இறக்கப்படும். அதேநேரத்தில் நாங்களே உண்மையான அதிமுக; ஒன்றரை கோடி தொண்டர்களும் தங்கள் பக்கமே என மார்தட்டுகிற தினகரன் அணிக்கும் தங்களது பலத்தை நிரூபித்தாக வேண்டிய அக்னி பரீட்சையாகத்தான் ஆர்கே நகர் தேர்தல் களம் இருக்கும்.

உக்கிர சோதனை
இவர்களை விட ஜெயலலிதா இல்லாத சூழலில், அதிமுக இரண்டாக பிளவுபட்டிருக்கும் தருணத்தில் எளிதாக வென்றே தீர வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு இருக்கிறது. திமுக ஆட்சிதான் அமையப் போகிறது என மேடை தோறும் பேசிஅரும் மு.க.ஸ்டாலினுக்கு நிச்சயம் ஆர்கே நகர் தேர்தல் உக்கிரமான சோதனை களம்தான்.

நெருக்கடியில் பாஜக
ஜெயலலிதா இல்லை; கருணாநிதி தீவிர ஓய்வில் இருக்கிறார்; ஆளும் அதிமுக உடைந்து போய்விட்டது; இப்படியான குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் பாஜகவும் ஆர்கே நகரில் சவடால்காட்டவே முயற்சிக்கும். இப்படி ஒவ்வொரு கட்சியுமே ஆர்கே நகரில் வென்றாக வேண்டிய கடும் நெருக்கடியில் இருக்கின்றன.

வாக்காளர்களுக்கு பேரம்
இதனால் வரலாறு காணாத வகையில் நூதனமான முறைகளில் எல்லாம் வாக்காளர்களை வளைத்துப் போடுவதற்கான முறைகேடுகளை அத்தனை அரசியல் கட்சிகளும் அரங்கேற்றுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இதனால் ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications