ஆர்.கே.நகரில் பணம் கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? ஹைகோர்ட் கேள்வி
பணம் கொடுத்தோர், வாங்கியோர் மீது எடுத்த நடவடிக்கை என்ன என, தேர்தல் ஆணையம், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணையை ஜூலை 11க்கு ஒத்திவைத்துள்ளது ஹைகோர்ட்.
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையம் மற்றும், போலீஸ் கமிஷனருக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர், ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக (அம்மா), அதிமுக (புரட்சி தலைவி அம்மா), திமுக, பாஜக உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு டி.டி.வி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தலா ரூ.4 ஆயிரம் பணம் வழங்கியதாக ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் புகார் அளித்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள், பணம் பெற்ற வாக்காளர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என கேட்டு ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த ஹைகோர்ட், பணம் கொடுத்தோர், வாங்கியோர் மீது எடுத்த நடவடிக்கை என்ன என, தேர்தல் ஆணையம், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணையை ஜூலை 11க்கு ஒத்திவைத்துள்ளது ஹைகோர்ட்.