ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்.. சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்படும் பணிகள் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறியதாவது:
ஆர். கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய நாள் முழுவதும் இந்தப் பணிகள் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒரு வாக்குச் சாவடிக்கு 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. 256 வாக்குச்சாவடியில் வைக்கப்பட வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
பின்னர், பாதுகாப்போடு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அறைகள் பூட்டப்படும். 24 மணி நேரமும் போலீசாரின் பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 11ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு இந்த இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும் என்று கார்த்திகேயன் கூறினார்.