ஜெ., மகேந்திரன், "டிராபிக்" உள்பட 32 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு.. 23 மனுக்கள் நிராகரிப்பு
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா உள்பட 32 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. காந்தியவாதி சசிபெருமாள் உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த 55 மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன் இறுதியில் 32 மனுக்கள் ஏற்கப்பட்டன. 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஜெயலலிதாவுக்காக காலி செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 3ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் முதல்வர் ஜெயலலிதா, சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் எண்ணிக்கை 55 ஆகும்.

2 கட்சிகள் மட்டுமே
இந்தத் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை மட்டுமே போட்டியிடுகின்றன. இன்று வேட்பு மனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 11 மணிக்கு பரிசீலனை தொடங்கியது.

டிராபிக்கின் புகார்
அப்போது ஜெயலலிதாவின் மனு தொடர்பாக தேர்தல் அதிகாரி சவுரி ராஜனிடம், டிராபிக் ராமசாமியின் பிரதிநிதியான மணிகண்டன் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்கு தொடர்பான ஆவணத்தில் முரண்பாடு உள்ளது. எனவே ஜெயலலிதாவின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் ராமசாமி கூறியிருந்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

நிராகரித்த சவுரிராஜன்
இருப்பினும் டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். ஜெயலலிதா மனு ஏற்கப்படுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 32 பேரின் மனுக்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சசிபெருமாள் மனு நிராகரிப்பு
காந்தியவாதி சசிபெருமாள் உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சசிபெருமாள் தனது சொத்துக் கணக்கை சரிவர சொல்லவில்லை என்று நிராகரிப்புக்குக் காரணம் சொல்லப்பட்டது.

உண்ணாவிரதத்தில் குதித்த சசிபெருமாள்
இதையடுத்து வெளியே வந்த சசிபெருமாள் உண்ணாவிரதத்தில் குதித்தார். தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் வேண்டும் என்றே நிராகரித்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மதுக் கொடுமைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் பெரியவர் சசி பெருமாள் என்பது நினைவிருக்கலாம்.

ராமசாமிக்கு எதிராக பலர் குரல்
முன்னதாக டிராபிக் ராமசாமி மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஜெயந்தி உள்ளிட்ட 10 பேர் அவரது மனுவை நிராகரிக்குமாறு கோரி மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டிராபிக் ராமசாமிக்கு முன்மொழிந்த 10 பேர் பெயர் மோசடியாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி அந்த பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

கடன் வாங்கித் தருவதாக கூறி
மகளிர் சுயஉதவிகுழுவில் கடன் வாங்கி தருவதாக எங்களது வாக்காளர் அடையாள அட்டையை வாங்கிச் சென்று வேட்புமனுவில் தவறாக பயன்படுத்தியதாக கூறினர். இருப்பினும் அந்தப் புகாரை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். ராமசாமி மனு ஏற்கப்படுவதாக அறிவித்தார்.

சனிக்கிழமைக்குள் வாபஸ் பெறலாம்
மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் 13ம் தேதிக்குள் திரும்பப் பெறலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 27ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, 30ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications