வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்: கிராம மக்கள் வெளியேற முடியாமல் அவதி
தருமபுரி: தருமபுரி அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் பாலத்தை கடந்து வெளி செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கத்தில் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் எல்லப்புடையாம்பட்டி கிராமத்தின் வழியே சென்று தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
இந்நிலையில், எல்லப்புடையாம்பட்டி வரட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயர்மட்ட பாலமாக கட்டப்பட இருந்ததால் அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், அதிகளவில் உபரிநீர் வெளியேறதன் காரணமாக தற்காலிக பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் எல்லப்புடையாம்பட்டி,கம்மாளம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, உடனடியாக பாலத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.