சென்ட்ரல் குண்டு வெடிப்பு: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ கண்டனம்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் சுவாதி எனும் இளம் பெண் உயிரிழந்தார் என்றும், படுகாயமுற்ற இருவர் உட்பட 14 பேர் காயம் அடைந்த சம்பவம் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
சுமை தூக்கும் தொழிலாளர்களும் பொதுமக்களும், பின்னர் காவல்துறையினரும் காயமுற்றோருக்கு சிகிச்சை தரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டது ஆறுதல் தருகிறது.
பொது மக்களின் உயிருக்கு உலை வைக்கும் இக்கொடுங் குற்றத்தில் ஈடுபட்டோர், அதன் பின்னணியில் இயக்கியோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஞானதேசிகன் அதிர்ச்சி
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எந்த பாவமும் செய்யாத அப்பாவிகள் ஏதோ ஒரு தீவிரவாதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் தீவிரவாதத்தின் மீதான கோபமும், ஆத்திரமும் அதிகரிக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற தீவிரவாத அமைப்புகள் உலா வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
தீவிரவாதம் எந்த ரூபத்தில் யாருக்கு ஆதரவாக வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். திறமைமிக்க காவல்துறையினர் இதன் பின்னணியில் செயல்படும் ஆணி வேரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

விஜயகாந்த் கண்டனம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மத்திய உளவு பிரிவு போலீசார் தமிழக உளவு பிரிவிற்கு முன் கூட்டியே இது குறித்து தகவல் கொடுத்தும், தமிழக காவல்துறை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
ஈவு, இரக்கமின்றி மனித உயிர்களை கொன்று குவிக்கும் இது போன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் இரங்கல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் உளவு அமைப்பின் உளவாளியாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப் பட்டிருப்பதாகவும் காவல்துறை அறிவித்த 24 மணி நேரத்திலேயே இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும், இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதி வெடிகுண்டுடன் ரெயில் நிலையத்திற்குள் நுழையும் அளவுக்கு பாதுகாப்பு மிக மோசமாக இருந்திருப்பதும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.

ஜி.ராம கிருஷ்ணன்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
குண்டு வெடிப்பு வன்முறைச் செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது. மேலும் காயமுற்றவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னையில் பாகிஸ்தானின் உளவாளிகள் கைதாகி இருக்கும் நிலையில் தாக்குதல்கள் நடந்திருப்பது மேலும் பல ஐயப்பாடுகளை ஏற்படுத்தி உள்ளது. நாடெங்கிலும் தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என்று உறுதியான முடிவை மத்திய அரசு எடுப்பதில் இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

பாரிவேந்தர்
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து எந்தவித அரசியல் குறுக்கீடும், உள்நோக்கமும் இன்றி தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ஏ.சி.சண்முகம்
புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவிலேயே, அமைதிப் பூங்கா என்னும் பெயர் படைத்த தமிழகத்தில், அதன் தலைநகரில் இன்று நிகழ்த்தப்பட்டுள்ள குண்டு வெடிப்பு, மக்கள் மனதில் மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. இது ஜனநாயகத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை பெற்று தர மத்திய, மாநில அரசுகள் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications