ஆர்.கே. நகர் தொகுதியில் கருப்பு பண புழக்கமா?...தகவல் அளிக்க 24 மணி நேர மையம் தொடக்கம்!!!
சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கறுப்புப் பண புழக்கத்தைத் தடுக்க, 24 மணி நேரமும் இயங்கும் மையத்தை, வருமான வரித்துறை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, சென்னை வருமான வரி கூடுதல் இயக்குனர் முரளி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
ஆர்.கே.நகரில் நடக்கும் இடைத்தேர்தல், பண புழக்கமின்றி, நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தலின் போது, கறுப்புப் பண புழக்கத்தைத் தடுக்க, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வருமான வரித் துறையை, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து, கறுப்புப் பண புழக்கத்தைத் தடுக்க, 24 மணி நேரமும் செயல்படும் மையம் துவங்கப்பட்டு உள்ளது. கறுப்புப் பண நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக, இம்மையத்திற்கு தகவல் அளிக்கலாம்.
தகவல் அளிப்பவர்கள் பற்றிய விவரம், ரகசியமாக வைக்கப்படும். மையத்தை, 1800 425 6669 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 044-2827 1907 என்ற எண்ணுக்கு, தகவலை பேக்ஸ் மூலமும் அனுப்பலாம். இணையதளம் மூலம் தகவல் அளிக்க, [email protected] என்ற முகவரியை பயன்படுத்தலாம்.
இவ்வாறு, சென்னை வருமான வரி கூடுதல் இயக்குனர் முரளி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.