தூத்துக்குடி: டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்றவரிடம் போலீஸ் விசாரணை
தூத்துக்குடி: டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற ஒருவர் தூத்துக்குடியில் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இதனை முன்னிட்டு சிறிய கடைகளிலும் கூட பெருமளவிற்கு வியாபாரம் நடக்கும் இதனை சாதகமாக பயன்படுத்தி கள்ளநோட்டை புழக்கத்தில் விடும் கும்பல் ஊடுறுவி இருப்பதாக எஸ்பி அஸ்வின்கோட்னிஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு எஸ்ஐ ஷியாம்சுந்தர் தலைமையிலான போலீசார் நேற்று முன் தினம் இரவு தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் மதுவாங்கிவிட்டு 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளார். அந்த நோட்டை சோதனை செய்ததில் அது கள்ள நோட்டு என தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைக்கப்பெற்ற தனிப்படையினர் அந்த நபரை மடக்கினர். இதில் அவர் செய்துங்கநல்லூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜெயசீலன்(57) என்பதும் அவர் 500 ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.
அவரை மடக்கிய போலீசார் அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 4-யை பறிமுதல் செய்தனர். மேலும் தென்பாகம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் செய்துங்கநல்லூரில் உள்ள ஜெயசீலன் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 257ஐ பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.30 லட்சம் ஆகும்.
மேலும் போலீசார் நடத்திய விசாரனையில் இந்த கள்ளநோட்டுகளை ஜெயலீலனுக்கு பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு நபர் கொடுத்தது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். மேலும் பிடிபட்டுள்ள ஜெயசீலனுக்கும் நாகர்கோவிலை சேர்ந்த ஒரு கள்ளநோட்டு கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதன் மூலம் ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.