கோவையில் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள்.. ரூ.1.2 கோடி பறிமுதல்.. 2 பேர் கைது
ரூ.ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கோவை: கோவையில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அது தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் இன்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஆனந்தன் என்பவரை தடுத்து நிறுத்தி, அவரது பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், ஆனந்தனையும், அவருடன் வந்த சுந்தர் என்பவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பிடிபட்ட ஆனந்தன் கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஏற்கனவே அவர் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. அதேபோல, அவருடன் வந்த சுந்தர் என்பவர் காரமடையை சேர்ந்தவர் என தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வேலாண்டிபாளையத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல்மாடியில் இருக்கும் அலுவலகத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சோதனையிட்டனர். அங்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்டு, கலர் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றினை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு . ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் கூறும்போது, கள்ள ரூபாய் நோட்டு தயாரிப்பில் இவர்கள் இருவரை தவிர மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதால்,அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருப்பதா என்பதை அறிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.