ரூ. 1 கோடி மதிப்பிலான போதை மாத்திரை இலங்கைக்கு கடத்தல்… 3 பேர் கைது
ராமநாதபுரம்: ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரை கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் உஷார் படுத்துப்பட்டனர். இதனையடுத்து, கடற்கரைப் பகுதியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
அப்போது, வேதாளை கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபடும்போது ஒரு ஆம்னி கார் வேதாளை கடற்கரைக்கு வந்தது. அந்தக் காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த 3 பேர் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
பின்னர், காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளை மண்டபம் காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு வந்தனர். பின்னர், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் இலங்கைக்கு கடந்த முயன்றது தெரிய வந்தது.
தப்பியோடிய முருகன், கோபால், மனோஜ் ஆகிய 3 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.