கிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைரம் பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தியபோது ரூ.10.5 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே இன்று காலை நடந்த சோதனையின்போது கோவையில் இருந்து ஓசூருக்கு சென்ற கார் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அதில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 கோடியே 49 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைரம் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ராஜேஷ் கூறுகையில்,
கோவையில் இருந்து ஓசூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10 கோடியே 49 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 37.36 கிலோ தங்கம், 4.6 கிலோ வெள்ளி, 22 கிராம் வைரம் ஆகியவை அடங்கும். விசாரணையில் அவற்றை ஓசூரில் உள்ள 12 நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்வதாக வாகனத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications