ரூ 15 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்... பிறந்த நாளன்று திறக்க திட்டம்!
சென்னை: எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ 15 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.
ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா சமாதியைப் பார்ப்பதற்காகவே மாநிலம் முழுவதிலுமிருந்து தினமும் ஏராளமானோர் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஜெயலலிதா சமாதி அருகே இதுவரை ஆயிரக் கணக்கானோர் மொட்டை போட்டு 'அம்மா' மீதான பாசத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தி உள்ளனர். இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்படுகிறது.
இன்று 5 வது நாளாக ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள இடத்தில் பெரிய நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த நினைவிடத்துக்கான மாதிரி வரை படம் தயாராகி வருகிறது.
எம்.ஜி.ஆர். நினைவிட வளாகம் மொத்தம் 8 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் பாதி இடத்தை ஜெயலலிதா நினைவிடத்துக்கு ஒதுக்கவிருக்கின்றனர்.
ஜெயலலிதா நினைவிடத்தை அமைக்க தமிழக அரசு ரூ.15 கோடி ஒதுக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளன்று இந்த நினைவிடம் திறக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications