பட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம்.. பெரியகுளத்தில் சர்வேயர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியகுளம்: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மகேஸ்வரி. மகேஸ்வரி பெயரில் ஒன்றரை சென்ட்டில் வீட்டு மனை வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாறுதல் செய்யலாம் என்று எண்ணி முறைப்படி விண்ணப்ப மனுவும் அளித்திருந்தார்.
இந்த மனுவானது, பெரியகுளம் நகராட்சி நில அளவு சர்வேயராக பணிபுரியும் செல்வம் என்பவரிடம் வந்தது. இந்த மனுமீது சர்வேயர் செல்வம் விசாரணையும் நடத்தி வந்தார். அப்போது, பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால் தனக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என கோவிந்தராஜிடம் சர்வேயர் கேட்டுள்ளார்.
இதற்கு ஒப்புக் கொண்ட கோவிந்தராஜூம் முதல்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட பின்னர், தனக்கு மேலும் 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக வேண்டும் என சர்வேயர் கேட்டிருக்கிறார். அதுவும் கண்டிப்புடன் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கோவிந்தராஜ், தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கோவிந்தராஜ் மூலம் கொடுத்து சர்வேயர் செல்வத்திடம் தரும்படி சொன்னார்கள். அதன்படி கோவிந்தராஜூம் வழங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சர்வேயர் செல்வத்தை கையும் களவுமாக கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.