குமரியில் ரூ.2000 கோடியுடன் தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர்... பாதிக்கப்பட்டவர் தற்கொலை
குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ரூ.2000 கோடியுடன் உரிமையாளர் தலைமறைவானதை அறிந்த பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்துக் கொண்டார்.
குமரி: குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் மகளின் திருமணத்துக்காக ரூ.17 லட்சம் முதலீடு செய்தவருக்கு கட்டிய பணத்தை வழங்காததால் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு ஏராளமானோர் தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்தனர்.
இந்த நிறுவனத்தில் பலரும் சேர்ந்து ரூ.2000 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதில் தனது மகளின் திருமணத்துக்காக வேணுகோபால் என்பவர் ரூ.17 லட்சத்தை முதலீடு செய்திருந்தார்.
கட்டிய பணத்தை வேணுகோபால் கேட்டபோது அவர்கள் அவரை இழுத்தடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் பெரும்பாலானோர் கட்டிய பணத்தை கேட்டதால் ரூ.2000 கோடியையும் சுருட்டி எடுத்துக் கொண்டு அதன் உரிமையாளர் நிர்மல் தலைமறைவாகிவிட்டார்.
இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதையடுத்து தலைமறைவாக உள்ள நிர்மலை கைது செய்யகோரி நிதி நிறுவன வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் நிர்மல் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை தமிழக அரசு மீட்டு தர வேண்டும் என்றும் அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.