நிதி நிறுவன மோசடி... தற்கொலை செய்து கொண்ட முதலீட்டாளர்.. சடலத்துடன் மக்கள் மறியல்
குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் ரூ.17 லட்சம் ஏமாற்றப்பட்டதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட முதலீட்டாளர் வேணுகோபாலின் சடலத்தை வைத்துக் கொண்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் மகளின் திருமணத்துக்காக ரூ.17 லட்சம் முதலீடு செய்து அதை வழங்காததால் தற்கொலை செய்து கொண்டவரின் சடலத்தை சாலையில் வைத்து மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு ஏராளமானோர் தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்தனர்.
இந்த நிறுவனத்தில் பலரும் சேர்ந்து ரூ.2000 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதில் தனது மகளின் திருமணத்துக்காக வேணுகோபால் என்பவர் ரூ.17 லட்சத்தை முதலீடு செய்திருந்தார்.
கட்டிய பணத்தை கொடுக்கவில்லை
கட்டிய பணத்தை வேணுகோபால் கேட்டபோது அவர்கள் அவரை இழுத்தடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் பெரும்பாலானோர் கட்டிய பணத்தை கேட்டதால் ரூ.2000 கோடியையும் சுருட்டி எடுத்துக் கொண்டு அதன் உரிமையாளர் நிர்மல் தலைமறைவாகிவிட்டார்.
மகளின் திருமணத்துக்காக ரூ.17 லட்சம் முதலீடு
இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதையடுத்து தலைமறைவாக உள்ள நிர்மலை கைது செய்யகோரி நிதி நிறுவன வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மறியல்
மேலும் நிர்மல் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை தமிழக அரசு மீட்டு தர வேண்டும் என்றும் அக்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிதி நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தோரும் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட வேணுகோபாலின் சடலத்தை சாலை வைத்துக் கொண்டு நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோரும், பொதுமக்களும் தமிழக-கேரள எல்லையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
உரிமையாளருக்கு ஏராளமான சொத்துகள்
நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்யவும், தங்களது பணத்தை திரும்ப வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே நிதி நிறுவன உரிமையாளர் நிர்மல், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக கூறப்படுகிறது.