புத்தம் புதிய ரூ.2000 நோட்டுகள்.. விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாய் ஐடி அதிரடி பறிமுதல்
வருமானவரித் துறையினர் இன்று மேற்கொண்ட அதிரடி சோதனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் மதிப்பில் புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப
சென்னை: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனையில் இறங்கியது. இதில் கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பலகோடி ரூபாய் மதிப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். மேலும், புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக எழும்பூரில் உள்ள அமைச்சருக்கு தொடர்புடைய தனியார் விடுதியில் திடுக்கிடும் பல ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற வரவு செலவு கணக்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.