ரூ 50ல் சேமிப்பு கணக்கு… இருக்கவே இருக்கு போஸ்ட் ஆபீஸ், இனி கொள்ளைக்கார வங்கி எதுக்கு?
கோவை: அரசு வங்கிகள் குறைந்த பட்ச இருப்புத் தொகையை 5 ஆயிரமாக உயர்த்தியும், நான்கு தடவைக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் கட்டணம் என மக்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் வேளையில், போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு, நடுத்தர வர்க்கத்திற்கு ஆபத்பாந்தவனாக தெரிகிறது.
எதற்கெடுத்தாலும் கட்டணம் என்று வங்கிகள் நடுத்தரவர்க்கத்திற்கு எதிரி போல் ஆகிக்கொண்டிருக்கும் சூழலில், போஸ்ட் ஆபிஸ் வங்கிக் கணக்கைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் இணையத்தளத்தில் தேடினோம்.

ஆச்சரியமூட்டும் விஷயங்கள் இருக்கவே, இணையதளம் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா, தகவல்கள் சரியானது தானா என்று உறுதி செய்து கொள்ள ஒரு மண்டல தபால் அலுவகத்தை தொடர்பு கொண்டோம்.
தொலைபேசியில் அழைத்தவுடன் மறுமுனையில் தமிழ் நாடு மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சாரதா சம்பத் வந்தார். தகவல்கள் சரியானவைதான் என்று கூறி மேலதிக விவரங்களுக்காக மற்றும் வணிக மேம்பாடு மற்றும் தொழில் நுட்ப துணை இயக்குனர் பி.ஆறுமுகம் அவர்களை அறிமுகப்படுத்தினார்.
50 ரூபாயில் சேமிப்புக் கணக்கு
வெறும் 50 ரூபாயில் சேமிப்புக் கணக்கை தொடங்க முடியும். 500 ரூபாய் வைப்புத் தொகையாக இருந்தால் செக் புக் வசதி கொடுக்கிறார்கள். வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
எந்த வித கட்டணம் இல்லாமல் ஏடிஎம் கார்டும் கொடுக்கிறார்கள். ஏடிஎம் கார்டுக்கு ஆண்டுக்கட்டணம் எதுவும் கிடையாது.
போஸ்ட் ஆபீஸில் உள்ள ஏடிஎம்மில் கட்டணமின்றி எத்தனை தடவை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
கோயமுத்தூர் நகரில் மட்டும் நான்கு ஏடிஎம்கள் போஸ்ட் ஆபீஸ் வளாகத்தில் இயங்குகின்றன. கோவை மண்டலத்தில் 22 ஏடிஎம்கள் உள்ளன. அது போல் தமிழகம் முழுவதும் பல ஏடிஎம்கள் போஸ்ட் ஆபிஸ் வளாகத்தில் இயங்குகின்றன.
தவிர எந்த போஸ்ட் ஆபிஸிலும் அடையாள அட்டை காட்டி, பணம் பெற்றுக்கொள்ளவோ, டெபாசிட் செய்யவோ முடியும்.
உதாரணமாக பெற்றோர் கணக்கில் மகனோ மகளோ சென்னையில் பணம் செலுத்தினால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்து தபால் நிலையத்தில் பெற்றோர்கள் உடனடியாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.
அவசரத்திற்கு எந்த வங்கி ஏடிஎம்மிலும் எடுக்கலாம்
வங்கிகள் இல்லாத ஊர்களிலும் தபால் நிலையங்கள் மூலம் பண பரிவர்த்தனை எளிதாகிறது. 150 வயதாகும் இந்திய தபால் துறைக்கு நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் போஸ்ட் ஆபீஸ்கள் உள்ளன.
போஸ்ட் ஆபிஸ் ஏடிம் இல்லாத ஊரில், அலுவலக நேரத்திற்கு பிறகு பணம் தேவைப்பட்டால் அருகில் உள்ள எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த வங்கிக்கான குறிப்பிட்ட கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
தலைமை மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்டெர்நெட் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. மீதம் உள்ள அலுவலங்கள் இன்னும் ஒராண்டுக்குள் இன்டெர் நெட் மூலம் இணைக்கப்பட உள்ளன.
சேமிப்பு வங்கிக் கணக்கு தவிர இப்போதெல்லாம் மணி ஆர்டரில் ஒரே நாளில் பணம் கிடைக்கும் வசதியும் உள்ளது.
காலை பத்தரை மணிக்குள் மணி ஆர்டருக்கான பணத்தை செலுத்தி விட்டால், சேர வேண்டிய ஊரின் போஸ்ட்மேன் அன்றே பணத்தை உரியவருக்கு பட்டுவாடா செய்து விடுவார்.
அலுவலகத்தை விட்டு போஸ்ட் மேன் சென்று விட்டால், பணத்திற்குரியவர் அந்த தபால் நிலையத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விரைவில் அனைத்து போஸ்ட்மேன்களுக்கும் டிஜிட்டல் கருவிகள் வழங்கும் திட்டம் உள்ளதாகவும், அதன் மூலம் சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, போன்ற வசதிகளும் வர இருப்பதாக ஆறுமுகம் தெரிவித்தார்.
வங்கிகளின் ஏகபோக கெடுபிடிக்களுக்கு மத்தியில், 50 ரூபாய்க்கு ஏடிஎம் கார்டுடன் கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு நடுத்தர வர்க்கத்தினருக்கு வரப்பிரசாதம்தானே!
-இர தினகர்












Click it and Unblock the Notifications