பஸ் தொழிலாளர்களுக்கு மேலும் ரூ.500 கோடி வழங்க தமிழக அரசு ஒப்புதல்
போக்குவரத்து தொழிலாளர்களுடன் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒப்புதல் அளித்தார்.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று சென்னையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ரூ.500 கோடி நிலுவைத் தொகை வழங்குவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7000 கோடி நிலுவைத் தொகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்நிலையில் மே 15-ஆம் தேதி (நாளை) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த 4-ஆம் தேதி அறிவித்தனர். முன்னதாக போக்குவரத்து துறை அமைச்சர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.எனினும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
நேற்று முதல்வர் எடப்பாடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்குவதாக தெரிவித்தார். எனினும் ரூ.7000 கோடி நிலுவைத் தொகை உள்ள நிலையில் வெறும் ரூ.750 கோடி மட்டும் வழங்குவதாக அரசு ஒப்புக் கொள்வது எந்தவிதத்தில் நியாயம் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில் தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி நாளை வேலை நிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில் இன்று சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.
அப்போது ஏற்கெனவே வழங்க ஒப்புக் கொண்ட ரூ.750 கோடி நிலுவைத் தொகையுடன் சேர்த்து மேலும் ரூ.500 கோடி என ரூ.1250 கோடி வழங்க அமைச்சர் ஒப்புதல் அளித்தார். எனினும் இதற்கு தொழிற்சங்கங்கள் அதிருப்தி தெரிவித்தன. மேலும் ரூ.750 கோடி நிலுவைத் தொகை முதல் கட்டமாகவும், வரும் செப்டம்பரில் ரூ.500 கோடியும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்கட்டமாக வழங்குவதாக தெரிவித்த நிதியானது எப்போது வழங்கப்படும் என்று அரசு தெரிவிக்கவில்லை. இதனால் நாளை திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. சுமார் 47 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவுள்ளன.












Click it and Unblock the Notifications