செல்லா நோட்டுக்களை டிச. 30க்குப் பின்னர் வைத்திருந்தால் ரூ. 50000 அபராதம்?
செல்லாத ரூபாய் பணத்தை, 10 நோட்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு, ரூ.50,000 வரை அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கையில் வைத்திருக்கும் பணத்தை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் டிசம்பர் 30 வரை டெபாசிட் செய்யலாம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
நவம்பர் 11ம் தேதி முதல் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர். ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து வருகின்றனர். மோடியின் அறிவிப்புக்குப் பின்னர் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், ஏழை, நடுத்தர மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பணத்தை டெபாசிட் செய்ய மத்திய அரசு அறிவித்த காலக்கெடு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. டிசம்பர் 30ம் தேதிக்கு மேல் செல்லாத ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்திருக்கும் நபர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ரூ.500 அல்லது ரூ.1000 நோட்டுகளில், 10க்கும் மேலாக வைத்திருப்போருக்கு இந்த அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதன்மூலமாக, பணப்பதுக்கலை தடுக்கவும் தீர்மானித்துள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.