மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.60 லட்சம் மோசடி புகார்- வழக்கு ஒத்திவைப்பு
சிவகங்கை: வேலை வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி செய்த புகாரில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த சுப்பையா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது :

அரசு போக்குவரத்துக் கழகத்தின் காரைக்குடி மண்டலத்தில் தொழில்நுட்ப உதவியாளராக உள்ளேன். மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி மூலம் ஆட்களை நியமிக்க உள்ளதாக மேலாண் இயக்குநராக இருந்த பாபு என்னிடம் கூறினார்.
இவரது பேச்சை நம்பி, எனக்கு தெரிந்த பலரிடமிருந்து ரூ.60 லட்சம் வரை பணத்தை மேலாண் இயக்குநரிடம் வாங்கி கொடுத்தேன். இவர் ஓய்வு பெற்றதும், புதிய மேலாண் இயக்குநர் ரங்கராஜ் பணியை முடித்து தருவார் என்றார். ஆனால் உறுதி அளித்தபடி யாருக்கும் வேலை தரவில்லை. மாறாக சிலருக்கு மட்டும் கடந்தாண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றினர்.
மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி, காரைக்குடி மண்டல முன்னாள் மேலாண் இயக்குநர் பாபு, தற்போதைய மேலாண் இயக்குநர் ரங்கராஜ் உள்ளிட்டோர் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இதே போல் திருப்பத்தூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், சுப்பையா பணத்தை வாங்கி ஏமாற்றியதால் அவர் மீது நடவடிக்கை கோரி மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.விமலா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 23க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியை விடாது கறுப்பாய் விரட்டும் வழக்குகளால் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications