புதிய தமிழக அரசின் முதல் சவால்.. ஜூன் 11ல் 6 காலியிடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல்
சென்னை: தமிழகத்தில் அமையவுள்ள புதிய அரசின் முதல் சவாலாக ஜூன் 11ம் தேதியன்று 6 காலியிடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 14 மாநிலங்களைச் சேரந்த 57 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதில் தமிழகத்தில் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையடுத்து இந்த 57 இடங்களுக்கும் ஜூன் 11ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகியோரும், திமுகவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், தங்கவேலு ஆகியோரும், காங்கிரஸின் சுதர்சன நாச்சியப்பனும் ஓய்வு பெறவுள்ளனர்.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து புதிய அரசு அமையவுள்ளது புதிய அரசு அமைந்ததும் அது சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை விட முக்கியமாக சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் மைனாரிட்டி அரசு அமைந்து விட்டால் இந்த ராஜ்யசபா தேர்தல் பெரும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.