ராஜ்யசபா தேர்தல்: திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் திருச்சி சிவாவை ஆதரிப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற உள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பிக்கு 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. 151 எம்.எல்.ஏக்களைக் கொண்ட அதிமுகவுக்கு 4 எம்.பிக்கள் கிடைப்பது உறுதி.

இடதுசாரிகள் மற்றும் தேமுதிக, புதிய தமிழகம் ஆகியவற்றின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மேலும் 1 எம்.பியும் அதிமுக அணிக்கு கிடைக்கும்.
இந்நிலையில் 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுக, தமது வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்தியுள்ளது. திருச்சி சிவாவுக்கு மனித நேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைக்கும். அதேபோல் தற்போது புதிய தமிழகமும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா தேர்தலில் திருச்சி சிவாவை ஆதரிப்போம் என்றார்.
புதிய தமிழகம் கட்சிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி, நிலக்கோட்டை ராமசாமி ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் நிலக்கோட்டை ராமசாமி, புதிய தமிழகம் மீது அதிருப்தி அடைந்து அதிமுக ஆதரவாளராக இருக்கிறார். இதனால் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. வாக்கு மட்டுமே திருச்சி சிவாவுக்கு கிடைக்கும்.
தற்போதைய நிலையில் திருச்சி சிவாவுக்கு மொத்தம் 26 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸ், தேமுதிக, பாமக இன்னமும் நிலைப்பாடு அறிவிக்கவில்லை.
இதனிடையே 6 எம்.பி. இடத்துக்கு தேமுதிக அல்லது காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தினால் இந்த 6வது இடத்துக்காக போட்டியிடும் வேட்பாளர்களில் யார் கூடுதல் வாக்குகளை பெறுகிறார்களோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications