கல்யாண மண்டபங்களில் மொய்விருந்து கூடவே கூடாது... தேர்தல் அதிகாரிகளின் ஸ்டிரிக்ட் உத்தரவு
சென்னை: திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் அன்னதானம் என்ற பெயரில் உணவு வழங்குவதை அனுமதிக்கக் கூடாது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் 6 மாதங்கள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் வரையில் அபராதம் அல்லது இவ்விரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தமிழக தேர்தல் அதிகாரிகள் அதுதொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்தியது.

தேர்தல் பிரச்சாரம் தொடர்பான துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் அச்சிடப்படும்போது சம்பந்தப்பட்ட அச்சகங்கள் அதுகுறித்த விவரங்களை தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிகள் இதில் வலியுறுத்தினர்.
போஸ்டர்கள் அச்சடிக்கும் கணக்கு
அச்சகங்களின் பெயர், முகவரி போன்றவை சுவரொட்டியில் இடம்பெறவேண்டும்- சுவரொட்டிகள் அல்லது துண்டு பிரசுரங்களின் பிரதிகள் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். இந்த விதிமுறைகளை மீறி யாரும் செயல்படக்கூடாது என்றும், கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.
மொய்விருந்து
தேர்தல் காலங்களில் அரசியல்கட்சிகள் நடத்தும் மொய்விருந்து சற்றே விசேசமானது. இந்த மொய் விருந்து மூலம் ஆட்கள் சேர்க்கும் யுக்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்துதான் சென்னையில் அறிமுகமாகி உள்ளது. எனவே வரவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் இது அரங்கேறி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மீட்டிங்கிற்கு, திருமண மண்டப உரிமையாளர்களை வரவழைத்து, 'செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்' என இரண்டு அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
திருமண மண்டபகங்கள்
திருமண மண்டபம் குறித்து அதிகாரிகள் மத்தியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், "காது குத்து, மொய்விருந்து போன்ற விழாக்களை சென்னையில் அந்தளவுக்கு கொண்டாட மாட்டார்கள். வீடுகளிலேயே எளிமையாக முடித்துக் கொள்வார்கள். திருமணம், மஞ்சள் நீராட்டுவிழா போன்றவைகள்தான் திருமண மண்டபங்களில் வைத்து நடக்கும். மொய்விருந்து, காதுகுத்து போன்ற விழாக்கள் நடத்த சென்னையில் உள்ள உறவினர்கள், கட்சிக்காரர்கள் பெயரில் பல மாதங்களுக்கு முன்னரே அட்வான்ஸ் கொடுத்து மண்டபங்களை பிடித்து வைத்திருந்தால், அந்த விபரங்களை துல்லியமாக சேகரித்துக் கொள்ளவேண்டும்.
கள்ள ஓட்டுகளை தடுக்க
தேர்தல் நேரத்தில் திருமண மண்டபங்களில் வெளியூர் ஆட்கள் தங்கியுள்ளனர், அவர்கள் மூலமாக பணப் பட்டுவாடா மற்றும் கள்ள ஓட்டு போடும் வேலைகள் நடக்கிறது' என்ற குற்றச்சாட்டுகள் வந்து விடுகிறது. இந்த முறை, அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications