சென்னையில் ரஷ்ய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் போராட்டம்!
சென்னையில் ரஷ்ய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : சென்னையில் ரஷ்ய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிரியா நாட்டில் நடக்கும் உள்நாட்டு போருக்கு ரஷ்யா ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
சிரியாவில் தீவிரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள இடங்களை கைப்பற்றும் விதமாக அந்த நாட்டு அரசு உள்நாட்டு போர் நடத்தி வருகிறது. சிரியாவிற்கு ரஷ்யா போர் உதவிகளை செய்து வருகிறது.
கடந்த 1 வாரமாக தீவிரமாக நடைபெற்று வரும் போரினால் சுமார் 700 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அடாவடித்தனத்தை அரங்கேற்றி வரும் சிரியா அரசு நடத்திய ரசாயன தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
சென்னையில் முற்றுகை போராட்டம்
5 மணி நேரம் போர் நிறுத்த அறிவிப்பு செய்தாலும் அது நடைமுறைபடுத்தப்படவில்லை என்று சிரியா மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நாளுக்கு நாள் சிரியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை சாந்தோம் சாலையில் உள்ள ரஷ்ய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைக்குழந்தைகளுடன் போராடிய முஸ்லிம் பெண்கள்
சென்னை பட்டினபாக்கம் சாலையில் இஸ்லாமிய பெண்கள் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். பிஞ்சுக் குழந்தைகளை கொன்று குவிப்பதை சிரியா அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.
சிரியாவிற்கு ரஷ்யா உதவுவதற்கு கண்டனம்
சிரியாவிற்கு ரஷ்யா போர் ஆயுதங்களை வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தினர். உள்நாட்டு கலவரத்தில் சிறுபிள்ளைகளை கொன்று குவிக்கும் அரசின் நடவடிக்கைக்கு பெண்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
ரஷ்யாவிற்கு எதிராக முழக்கம்
சென்னை சேப்பாக்கத்திலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சிரியாவில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். சிரியாவில் சன்னி பிரிவு இஸ்லாமிய அமைப்பினர் பெரும்பான்மை வகிக்கின்றனர், ஆனால் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் பஷர் அல் ஆசாத் கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருகிறார் என குற்றம்சாட்டப்படுகிறது.
உலக நாடுகளின் தலையீடு தேவை
ஐநாவின் அமைதிப்படையை அனுப்பி சிரியாவில் நடக்கும் போரை நிறுத்தி, அந்த அமைதிப்படையே தேர்தலை நடத்தி மக்கள் விரும்பும் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர் கேட்டுக் கொண்டார். உலக நாடுகள் மவுனம் காக்காமல் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் போராட்டம் தீவிரமடையும் என்று தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சேலத்திலும் இஸ்லாமியர்கள் போராட்டம்
சென்னைப் போலவே சேலத்திலும் தலைமை தபால் நிலையம் முன்பு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஷ்ய நாடு சிரியாவை விட்டு வெளியேற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி இஸ்லாமியர்கள் போராட்டத்தின் போது கோஷங்களை எழுப்பினர்.