"அம்பாசிடர்" கார்தான் "ஆடி" கார் போல ஜொலிக்கிறது.. சட்டசபையில் அமைச்சர் சண்முகநாதன் ருசிகரம் !
சென்னை: திமுக ஆட்சி காலத்தில் அம்பாசிடர் கார் போல இருந்த பால்வளத்துறை தற்போது புதுமை நிறைந்த ஆடிகார் போல ஜொலிக்கிறது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் சண்முகநாதன் கூறினார்.
தமிழக சட்டசபையில் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சண்முகநாதன் பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அம்பாசிடர் கார் போல பழமையாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் அம்பாசிடர் கார், புதுமை நிறைந்த ஆடிகார் போல மாறியுள்ளது என்றார்.
மேலும், அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களிலும் தலா ரூ.50 லட்சம் வீதம் 17 அதிநவீன பாலகங்கள் ரூ.8.5 கோடியில் அமைக்கப்படும்.
நிகழாண்டில் ரூ.7 கோடியில் 35 பால் குளிரூட்டும் நிலையங்களும் பொலிவுறும் வகையில் மேம்படுத்தப்படும்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமச்சீர் கால்நடைத் தீவன திட்டமானது, காஞ்சிபுரம்-திருவள்ளூர், தருமபுரி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், சொந்த நிலம் கொண்டுள்ள 100 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.10 லட்சம் செலவில் 100 புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என்றார்.