கிரானைட் முறைகேடு: நரபலி, சிதைக்கப்பட்ட சின்னங்கள் - நேரில் புகார் தெரிவிக்க தண்டோரா
மதுரை: மதுரையில் கிரானைட் குவாரி கொள்ளையர்களால் அழிக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய தொல்லியல் சின்னங்கள் தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது. கிரானைட் குவாரிப் பணியின்போது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என தண்டோரா அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிரானைட் கொள்ளைகள் தொடர்பாக ஐந்தாவது கட்ட விசாரணையை சகாயம் குழு தொடங்கியுள்ளது.
இதில், கிரானைட் குவாரிகளால் சேதப்படுத்தப்பட்ட, அழிக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கிரானைட் குவாரிகள் செயல்பட்ட மலைக் குன்றுகளில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சமணர் படுகைகள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இவற்றில் பல அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் இருந்தால் தெரிவிக்கலாம் என சகாயம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை மாவட்டத்தில் தொல்லியல் முக்கியத்தும் வாய்ந்த இடங்கள், நீர்நிலைகளுக்கு கிரானைட் குவாரிப் பணியின்போது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ, தொலைபேசியிலோ அல்லது தபால் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.
முகவரி: தனி அலுவலர் மற்றும் சட்ட ஆணையர் அலுவலகம், பூமாலை வணிக வளாகம், பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம், மதுரை. தொலைபேசி எண்: 0452-2533903.
தண்டோரா அறிவிப்பு
மேலூர் பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத கிரானைட் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை அதிகாரி சகாயத்திடம் புகார் செய்யலாம் என கிராமங்களில் வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் நேற்று அறிவித்தனர்.
நேரில் புகார்
சட்டவிரோத கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக அதிகாரி சகாயம் நாவினிப்பட்டி, கீழையூர், கீழவளவு பகுதியில் நேரடியாக விசாரணை நடத்தவுள்ளார். எனவே கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சகாயத்திடம் நேரில் புகார் அளிக்கலாம் என தண்டோரா மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் சின்னங்கள் சிதைப்பு
நான்காவது கட்ட ஆய்வின் போது, 2000 ஆண்டு பழமையான சமணர் படுகைகள், பஞ்சபாண்டவர் குளம், திருவாதவூர், புறாக்கூடு மலை, அரிட்டாப்பட்டி மலைகளிலும் தொல்லியல் புராதன சின்னங்கள் முற்றிலும் குவாரிகளால் அழிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
நரபலி கொடுத்த பி.ஆர்.பி
1998-லிருந்து 2008 வரை பி.ஆர்.பி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் என்பவர் பி.ஆர்.பி நிறுவனத்தின் அராஜகப் போக்குப் பிடிக்காமல் வெளியேறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை
கிரானைட் குவாரியில் வைக்கும் வெடிகளால் கீழவளவு வீர காளியம்மன் கோயில் சிதலமடையவே, இது குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பி.ஆர்.பி நிறுவன அடியாட்கள் துரத்தவே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரை கண்டுபிடித்து பொக்கிஷமலை அடிவாரத்தில் உள்ள கிரானைட் குவாரிக்கு கொண்டு போய் மிரட்டியுள்ளனர்.
கண் முன்னே நரபலி
உயிர் பயம் வருவதற்காக அவரது கண் முன்னே காவி வேட்டி கட்டிய மந்திரவாதி மூலம் 25 வயதுடைய மனநலம் பாதித்த இளைஞரை நரபலி கொடுத்தனர். உனக்கும் இதே கதிதான் வரும் என்று எச்சரித்து அனுப்பினார்களாம். இந்த சம்பவத்தினால் அச்சமடைந்த அவர் சகாயத்திடம் புகார் கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கலாம்.
இதேபோல கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமடையாமல் நேரிலோ, தொலைபேசி மூலமாகவே புகாராக தெரிவிக்கலாம் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications