சகாயம் விசாரணைக் குழுவில் ஆஜராக இருந்த புகார்தாரருக்கு கொலை மிரட்டல்!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழுவில் ஆஜராக இருந்தவருக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் தலைமையிலான விசாரணை தொடங்க உள்ளது. அந்த விசாரணையில் மேலூர் குமார் நகரில் வசிக்கும் முருகேசன் (58) என்பவரும் ஆஜராக உள்ளார்.
இந்நிலையில், முருகேஷனுக்கு மர்மநபர்கள் சிலர் ஆயுதங்களுடன் நேரில் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து முருகேசன் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது, மதுரை ஆட்சியராக இருந்த சகாயத்திடமும் ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தேன். தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்த உள்ளார்.
இந்தநிலையில், கடந்த 7 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் 2 கார்களில் ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் என் வீட்டின் கதவை தட்டி எழுப்பினர். சகாயம் நடத்தும் விசாரணையில் நீ கலந்து கொள்ளக் கூடாது. மீறி நீ அதில் கலந்து கொண்டால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
முருகேஷன் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், முருகேஷனுக்குப் போலீசார் பாதுகாப்பும் அளித்துள்ளனர். இதற்காக இரண்டு போலீசார் சுழற்சி முறையில் சாதாரண உடையில் கைத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications