வேட்டியைத் தடை செய்யும் ஆங்கிலேய அடிமைகள்.. சகாயம் ஐ.ஏ.எஸ் கொதிப்பு!
சென்னை: வேட்டி தமிழர்களின் ஆடை. மரபின் அழகிய வெளிப்பாடு. பாரம்பரியத்தின் அடையாளம். பெருமைமிக்க இந்த அடையாளத்தை தமிழகத்தில் அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அவமதிப்பது என்பது பாரம்பரிய அடையாளத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் உளவியல் வன்முறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், வேட்டி தினத்தை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தி, வேட்டியை தமிழர்கள் மத்தியில் உணர்வுமிக்க ஒரு ஆடை என்பதை நினைவூட்டிய பெருமைக்குரியவருமான சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப்புக்குள் நடந்த பொது நிகழ்ச்சிக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மற்றும் மூத்த வக்கீல்கள் காந்தி, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் வேட்டி அணிந்து சென்றதால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
வேட்டியில் வந்த ஒரே காரணத்திற்காக நீதிபதியையையும், மூத்த வக்கீல்களையுமே வெளியில் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுக்க சென்னை கிரிக்கெட் கிளப்பின் செயலுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
சகாயம் கொதிப்பு
தமிழகத்தில் வேட்டி தினத்தை அறிமுகப்படுத்தி, தமிழர்கள் மறந்து போன வேட்டியை மீண்டும் ஒரு உணர்வு மிக்க ஆடையாக அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவரான சகாயம் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அடையாளத்தின் மீதான வன்முறை
இதுகுறித்து அவர் கூறுகையில், வேட்டி தமிழர்களின் ஆடை. மரபின் அழகிய வெளிப்பாடு. பாரம்பரியத்தின் அடையாளம். பெருமை மிக்க இந்த அடையாளத்தை தமிழகத்தில் அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அவமதிப்பது என்பது பாரம் பரிய அடையாளத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் உளவியல் வன்முறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வெள்ளைக்காரனின் அடிமைகள்
சுதந்திர தேசத்தில் வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற விதியை பின்பற்றும் அடிமையாக இன்றும் பலர் இருப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
உளவியல் வன்முறை
தமிழர் கலாச்சாரம் தாழ்வானது என்ற எண்ணத்தை தக்க வைக்கவும், மேற்கத்திய கலாச்சாரம்தான் உயர்வானது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் வகையில் உளவியல் ரீதியாக நடத்தப்படும் வன்முறை.
விதிகளை மாற்றுங்கள்
தமிழக அரசே வேட்டி தினத்தை கொண்டாடி வரும் காலக்கட்டத்தில் இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்புடையதல்ல. இந்த விதிகள் மாற்றப்பட வேண்டும்.
அடிமைகளுக்குப் பாடம் கற்பிப்போம்
வேட்டி தினம் என்பது ஆண்டில் ஒருநாள்தான். ஆனால் இதை ஒரு இயக்கமாக உருவாக்குவதுதான் ஆங்கில மரபின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடாத அடிமைகளுக்கு அளிக்கும் பதிலாக அமையும் என்றார் சகாயம்.