திருச்செந்தூரில் ஆடி சுவாதி : சுந்தரமூர்த்தி நாயனாரும் வெள்ளை யானை வீதியுலாவும்!
திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.

இதைப் போற்றும் விதமாக, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி சுவாதி நாளில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. பிறகு விஸ்வரூப தரிசனம் நடந்தது. அதன் பிறகு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
கோயில் யானையின் உடல் முழுவதும் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்கச் சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரதவீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர்.
இதன் பிறகு தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன் சேரமான் நாயனாரும் மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.












Click it and Unblock the Notifications