ரோட்டில் திரை கட்டி திருட்டு சிடியில் “கொம்பன், காஞ்சனா-2” ஒளிப்பரப்பிய கில்லாடி: சேலத்தில் கைது
சேலம்: சேலத்தில் அகன்ற திரைகட்டி சாலையோரத்தில் கொம்பன், காஞ்சனா திரைப்படங்களை ஒளிபரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி பிரிவு ரோட்டில், அங்குள்ள ஒரு மகளிர் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில், அகன்ற திரைகட்டி கார்த்திக் நடித்த கொம்பன், மற்றும் லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2 ஆகிய திரைப்படத்தை ஒளிபரப்பிகொண்டுள்ளதாக அந்த வழியாக சென்ற சிலர் சேலம் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, சேலம் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்ஆனந்தன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், மற்றும் போலீசார் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி பிரிவு ரோட்டிற்கு சென்றனர்.
அப்போது அங்கு மகளிர் மன்றத்தினர் சார்பில் கொம்பன், காஞ்சனா திரைப்படங்கள் 16 எம்.எம் அகன்ற திரையில் புரொஜக்டர் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீசார் படம் திரையில் ஓடுவதை நிறுத்தினார்கள்.
பின்னர் 16 எம்.எம். அகன்ற திரையில் புதிய படங்களை ஒளிபரப்பு செய்த மோரூரை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.
மேலும் படம் ஒளிபரப்ப பயன்படுத்தப்பட்ட புரொஜக்டர் மற்றும் அகன்ற திரை ஆகியவற்றையும் சேலம் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து கைதான ரமேசை, போலீசார் சங்ககிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.