சங்கரராமன் கொலை வழக்கு: ஜெயேந்திரர் உட்பட 23 பேரும் விடுதலை- புதுவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
புதுச்சேரி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக புதுவை நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்தது.
தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ந் தேதி மாலை, 5.30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக வரதராஜ பெருமாள் கோவில் கணக்காளர் கணேஷ், காஞ்சிபுரத்திலுள்ள விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதின் பேரில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.

தீபாவளி அன்று சங்கராச்சாரி கைது
இந்த வழக்கில் 2004ம் ஆண்டு நவம்பர் 12ந் தேதி தீபாவாளி நாளில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

ரவி சுப்பிரமணியன் அப்ரூவர்
வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகள் தரப்பில் இடம் பெற்றிருந்த ரவி சுப்ரமணியன், அப்ரூவராக மாறி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

1875 பக்க குற்றப்பத்திரிகை
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 1875 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர்

புதுவைக்கு மாற்றம்
தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2009ம் ஆண்டு முதல் புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

371 சாட்சிகள்
இந்த வழக்கில், சங்கராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்தசர்மா, மகள் உமா மைத்ரேயி உள்ளிட்ட 371 சாட்சிகள் போலீசாரால் சேர்க்கப்பட்டனர்.

83 பேர் பல்டி
இதில் 187 சாட்சிகளை மட்டும் புதுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இவர்களிடம் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அப்ரூவர் ரவி சுப்ரமணியன் உள்ளிட்ட 83 பேர் பல்டி அடித்துவிட்டனர்.

கதிரவன் வெட்டிக் கொலை
இந்த வழக்கு விசாரணையின்போது, 6 வது எதிரியாக குற்றம்சாட்டப்பட்டிருந்த கதிரவன் என்பவர் கடந்த மார்ச் மாதம் சென்னை கே.கே.நகரில் காரில் வரும் போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

23 பேர் மீது மட்டும் வழக்கு
25 பேரில் ரவி சுப்பிரமணியன் அப்ரூவர் ஆனதாலும் கதிரவன் வெட்டி கொலை செய்யப்பட்டதாலும் எஞ்சிய 23 பேர் மட்டும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தனர்.

4 நீதிபதிகள் மாற்றம்
தொடக்கத்தில் இந்த வழக்கை நீதிபதி சின்னபாண்டியன் விசாரித்தார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணராஜா, விசாரணை நடத்தினார். 3வதாக நீதிபதி ராமசாமி விசாரணை நடத்தினார். ஆனால் நீதிபதி ராமசாமி, ஜெயேந்திரர் மற்றும் இளம்பெண் ஒருவருடன் உரையாடும் தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ராமசாமி மாற்றப்பட்டு நீதிபதி முருகன் நியமிக்கப்பட்டார்.

இன்று தீர்ப்பு
இந்த வழக்கில் இறுதிவிசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி முருகன் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று குற்றம்சாட்டப்பட்டோரில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 21 பேர் புதுவை நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட தில் பாண்டியன், சில்வர் ஸ்டாலின் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை.

அனைவரும் விடுதலை
இதைத் தொடர்ந்து முற்பகல் 11 மணியளவில் நீதிபதி முருகன் தீர்ப்பை வாசித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி முருகன் பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

பலத்த பாதுகாப்பு
இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுவதையொட்டி புதுவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.











Click it and Unblock the Notifications