சென்னையில் இந்த வருஷம் கிறிஸ்துமஸ் தாத்தா வீட்டுக்கு வர மாட்டார்
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பை மக்கள் சந்தித்துள்ளதாலும், இயல்பு நிலைக்கு மக்கள் இன்னும் திரும்பாததாலும், கொண்டாட்ட மன நிலையில் மக்கள் இல்லாததாலும் இந்த வருட கிறிஸ்துமஸை மிகவும் எளிமையாக கொண்டாட கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இடம் பெறும் நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு இடம் பெறாது என்றும் கிறிஸ்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக இந்த வருடம் வீடுகள் தோறும் செல்லும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாம். தேவாலயங்களிலும் கொண்டாட்டங்கள் இடம் பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களைப் புரட்டிப் போட்ட வெள்ளம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கன மழை மற்றும் பெரு வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை சுத்தமாக ஸ்தம்பித்துப் போய் விட்டது.

அத்தனை பேரும் சோகத்தில்
ஏழை பணக்காரன், மிடில் கிளாஸ் ஹைகிளாஸ் என எந்த பாரபட்சமும் இல்லாமல் இந்த கன மழையாலும், பெரு வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கிறிஸ்தவர்கள் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். இதுதொடர்பாக பேராயர் தெய்வாசீர்வாதம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

கொண்டாட்டம் வேண்டாம்
வறுமையில் வாடுவோர், ஏழைகளை மகிழ்விக்கும் பண்டிகைதான் கிறிஸ்துமஸ். நமது சகோதர சகோதரிகள் இன்னலில் வாடிக்கொண்டிருக்கும்போது நாம் மட்டும் பண்டிகையை கொண்டாடுவது, அந்த கொண்டாட்டத்தை தவறாக புரிந்துகொள்ள வழிவகுக்கும். எனவே அனைத்து வகை கொண்டாட்டங்களையும் கைவிட்டுவிட்டு, நமது பார்வையை பாதிக்கப்பட்டவர்கள் மீதும் அவர்களுக்கான மறுவாழ்வு மீதும் செலுத்துவோம். இதுதான் கிறிஸ்துமசின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தும்.

கீத ஆராதனை ரத்து
ஏற்கனவே பல ஆலயங்களில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை, கீத பவனி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர் என்பது மகிழ்ச்சி. மற்றவர்களும் இதை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதுபோல் சி.எஸ்.ஐ.யின் சென்னை பேராய ஊழியர்கள் அனைவரும் தங்களின் ஒருநாள் சம்பளத்தை வெள்ள பாதிப்பு மறுவாழ்வு பணிகளுக்கு அளிக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் தாத்தா வர மாட்டார்
மேலும் இந்த முறை கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு வலம் வரும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வருடம் கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்தவர்களின் வீடு தேடி வர மாட்டார்.

விளக்கு அலங்காரம் இருக்காது
அதேபோல கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நட்சத்திர விளக்குகள் கட்டப்பட்டு, கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்பட்டு, மலர்கள், வண்ணக் காகிதங்கள், தொடர் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு ஆலயங்கள் ஜொலிக்கும். ஆனால் இந்த அலங்காரத்தை இந்த ஆண்டு அனைத்து ஆலயங்களும் தவிர்க்கவுள்ளன.

கிறிஸ்துமஸ் மரமும் கிடையாது
மேலும் வீடுகளிலும் நட்சத்திர விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்களை வைப்பது போன்ற அலங்கார நிகழ்ச்சிகளும் இடம்பெறாது என்று தெரிகிறது. மொத்தத்தில் மற்ற மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் தங்களது கொண்டாட்டங்களை கிறிஸ்தவர்கள் மொத்தமாக கை விட்டு பிரார்த்தனையில் மட்டுமே இந்த வருடம் ஈடுபடவுள்ளனர்.












Click it and Unblock the Notifications