காலை 10 மணி முதல் ராத்திரி 10 மணி வரை.. சந்து சந்தாக அதிமுகவுக்காக சரத்குமார் பிரசாரம்!
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் பிரசாரத்தில் குதித்து விட்டார். இன்று முதல் அவர் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுவரை பிரசாரம் செய்து வரும் எந்த ஒரு தலைவரும் மக்களை வசீகரிக்கவில்லை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியே அத்தனை பேரும் பேசி வருவதாலும், பேச்சுத் திறமை இல்லாததாலும், பேச்சில் ஒரு சத்தும், சாரமும் இல்லாததாலும் மக்கள் கடுப்பாகியுள்ளனர்.
இந்த நிலையில் மைக் போட்டு பேசும் கூட்டத்தில் சரத்குமாரும் இன்று முதல் இணைந்துள்ளார்.
இன்று அவர் சென்னையில் அவர் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவரது கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை...
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
காலை 10 மணிக்கு திருவான்மியூர் மார்க்கெட் அருகே பிரசாரத்தை தொடங்கி, பெருங்குடி ஆதிபராசக்தி மண்டபம் அருகில், தரமணி பஸ் ஸ்டான்ட், வேளச்சேரி காந்தி ரோடு, மேடவாக்கம் பஸ் ஸ்டான்ட், பி.டி.சி. காலனி, கண்ணகிநகர், நீலாங்கரை - சர்ச், பாலவாக்கம் பெரியார் சாலை வரை காலை பிரசாரத்தை முடிக்கிறார்.
அதன் பின்னர், மவுலிவாக்கம் பாய்க்கடை, குன்றத்தூர் தேரடி, அனகாபுத்தூர் பஸ் ஸ்டான்ட், பம்மல் பஸ் ஸ்டான்ட், பல்லாவரம் மார்க்கெட், குரோம்பேட்டை - ராதாநகர் தாம்பரம் மார்க்கெட் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
முடிவில் ஆலந்தூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.