தன் அணியில் போட்டியிட்டவர் என்றாலும் சற்றும் தயங்காமல் சிம்புவை சாடிய சரத்!
சென்னை: நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் தன் அணி சார்பில் போட்டியிட்டவர், தனக்காக பிரஸ்மீட்டில் நாடி நரம்பு புடைக்க கத்தி பேட்டிக் கொடுத்தவர் என்ற போதிலும் நடிகர் சிம்புவின் பாடல் தவறு, அவர் குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் மெளனமாக இருப்பது ஏன்று கேட்டுள்ளார் முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.
சிம்பு மற்றும் அனிருத்தின் அசிங்கப் பாட்டு மக்களை அதிர வைத்துள்ளது. வழக்குகள் பதிவாகியுள்ளன. இருவரும் போலீஸில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சரத்குமார் இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் தவறானது, அது யார் பாடியிருந்தாலும், எழுதியிருந்தாலும் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கம் ஏன் மெளனமாக உள்ளது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஏன் மெளனமாக உள்ளார் என்றும் சரத்குமார் கேட்டுள்ளார். நடிகர் சங்கத்தை இந்த கேள்வி தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சங்கத் தேர்தல் நடந்தபோது சரத்குமார் அணியும், நாசர்- விஷால் அணியும் கடுமையாக மோதின. இரு தரப்பும் சரமாரியாக புகார்களை சுமத்தினர். ஒருவரை ஒருவர் கேவலமாக விமர்சித்தும் கொண்டனர்.
இதில் சரத்குமார் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் சிம்பு. தோல்வியைச் சந்தித்தார். சரத்குமாருக்காக பரபரப்பாக பிரஸ் மீட்டிலும் பேசினார் சிம்பு. விஷாலை கடுமையாகவும் விமர்சித்தார். இப்படி தன் அணியில் போட்டியிட்டவர் என்ற போதும், தனக்காக குரல் கொடுத்தவர் என்ற போதிலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் சிம்பு செய்தது தவறு என்று விமர்சித்துள்ளார் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.